புதுடெல்லி: பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள தமிழக அரசு, பணி நீக்கம் செய்யப்பட்ட 12,524 மக்கள் நலப் பணியாளர்களுக்கு மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மாதம் 7,500 ரூபாய் சம்பளத்தில் இந்தப் பணி வழங்கப்படும் என்றும் மக்கள் நலப் பணியாளர்கள் யாரேனும் உயிரிழந்திருந்தால் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்குப் பணி வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இவ்வழக்கு நெடுநாளாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், பணியாளர்களுக்குப் பணி வழங்க திமுக அரசு முடிவு செய்துள்ளதால், இவ்விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

