சென்னை: இணையம் வழி நடைபெறும் சூதாட்டங்கள் கொலை, கொள்ளைச் சம்பவங்களைத் தூண்டுவதாக பாமக இளையரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், 'ஆன்லைன்' சூதாட்டத்திற்கு உடனடியாக முடிவு கட்டப்படவில்லை என்றால், தமிழகத்தில் ஏராளமான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விடும் என்று எச்சரித்துள்ளார்.
மேலும், வாழ வேண்டிய இளைஞர்கள் குற்றவாளிகளாகக்கூடும் என்று குறிப்பிட்டுள்ள அன்புமணி, அண்மையில் நிகழ்ந்துள்ள சில சம்பவங்களையும் சுட்டிக்காட்டி உள்ளார்.
"சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் தொடர்ந்து பயணிகளிடம் சங்கிலிப் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த மயிலாப்பூரைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இத்தகைய குற்றங்களைச் செய்ய அவரை தூண்டியது 'இணைய வழி' சூதாட்டம்தான்.
"சென்னை மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் அவர் அந்தச் சூதாட்டத்திற்கு அடிமையாகியுள்ளார். அதற்கு மாநகராட்சிப் பணி மூலம் கிடைக்கும் ஊதியம் போதவில்லை என்பதால், நகைக்கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்துள்ளது," என்று அன்புமணி ரா
மதாஸ் தெரிவித்துள்ளார்.
சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் கொலைகளை செய்து கொள்ளையடித்ததாகவும் குறிப்பிட்டுள்ள அவர், இப்போது சிலர் தொடர் சங்கிலிப் பறிப்புகளில் ஈடுபட்டு வருவதாகக் சுட்டிக்காட்டி உள்ளார்.
"எனவே கொலை, கொள்ளைகளைத் தூண்டும் இந்தச் சூதாட்டத்துக்கு உடனடியாக முடிவு கட்டப்படவில்லை என்றால், ஏராளமான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விடும்.இதனை ஒழிக்க கொள்கை அளவில் தமிழக அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. அதற்கான தீர்வு புதிய சட்டமே தவிர, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு அல்ல.
"எனவே, இனியும் தாமதிக்காமல் இணைய வழி சூதாட்டத்தை தடுக்க உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி புதிய தடைச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்," என அன்புமணி ராமதாஸ் மேலும் வலியுறுத்தி உள்ளார்.

