சென்னை: ஓமிக்ரானின் புதிய வகை திரிபு பாதிப்பு தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், பாதிக்கப்பட்டவர் குணமடைந்துள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக கூறினார்.
"ஓமிக்ரான் பிஏ-4 என்ற புதிய திரிபு தற்போது பல்வேறு நாடுகளில் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், செங்கல்பட்டைச் சேர்ந்த ஒருவருக்கு அந்த பாதிப்பு இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது.
"இதையடுத்து அவர் தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுவிட்டார் என மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். மேலும், அவருடன் நெருக்கமாக இருந்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை," என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போது ஒருவர்கூட கொரோனா பாதிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறவில்லை என்று குறிப்பிட்ட அவர், தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக அரசு தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.