தஞ்சை: சுற்றுலாத் துறையில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் க. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடப்பாண்டில் மட்டும் தஞ்சைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்..
தஞ்சையில் சுற்றுலாப் பயணிகளுக்குப் பயனளிக்கும் வகையில் அங்கு தங்குமிடம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறினார்.
தஞ்சாவூர் பெரிய கோவிலை உலக அதிசயங்களுக்கான பட்டியலில் சேர்ப்பதற்கு சுற்றுலாத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் தஞ்சாவூருக்குத்தான் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருவதாகவும் கடந்த 2018 - 19ஆம் ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 1.80 கோடி பேர் தஞ்சாவூருக்கு வருகை தந்தனர் என்றும் அமைச்சர் க.ராமச்சந்திரன் கூறினார்.
“கொரோனா நெருக்கடி காரணமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துபோனது. கடந்த ஆண்டு 65 லட்சம் பேர் வந்து சென்றனர்.
“நிகழாண்டில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 62 லட்சம் பேர் வந்துள்ளனர். எனவே நிகழாண்டு இறுதிக்குள் தஞ்சாவூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டும்,” என்று அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகளின் வருகையால் கிடைக்கும் பெருந்தொகை சாதாரண கடைகளை நடத்துவோர், ஏழைகள், சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்ட பலருக்குப் போய்ச் சேருவதாகக் குறிப்பிட்ட அவர், தனி மனித வருவாயும் அதிகரிக்கிறது என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்திய அளவில் தமிழ்நாடு எப்போதும் முதலிடத்தில் இருந்து வருகிறது.
“தமிழ்நாட்டில் கோவில்களின் எண்ணிக்கை அதிகம். தமிழகக் கோவில்களில் உள்ள கலை நுணுக்கங்கள் போன்று வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
“தமிழகத்திலுள்ள கோவில்களில் இருக்கும் சிற்பக்கலை போல வேறு எங்குமே பார்க்க முடியாது,” என்றும் அமைச்சர் க.ராமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் கேளிக்கை பூங்கா அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப் படும் என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவிலேயே முதல் முறையாக தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில்தான் வருங்கால சந்ததியினரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழர்களின் கலை, பண்பாடு போன்றவை மிகச் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.


