காஞ்சிபுரம்: கீழடியைப் போல் தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பல்வேறு அரிய தொல்பொருள்கள் கிடைத்து வருகின்றன. குறிப்பாக சோழர், பல்லவர் காலத்து கலைப்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே கீழடியைப்போல் காஞ்சிபுரத்தின் வடக்குப்பட்டு ஊராட்சியிலும் முழு வீச்சில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
வடக்குப்பட்டு ஊராட்சியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த அகழாய்வுப் பணிகள் நான்கு மாதங்கள் நீடித்தன. அப்போது பல்வேறு தங்க அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டன.
எனவே அங்கு அகழாய்வுப் பணிகள் நீடிக்க வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்தியதை அடுத்து நடப்பாண்டு மே மாதம் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி துவங்கியது.
இந்த அகழ்வாராய்ச்சி குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒரே மாதத்தில் ஏராளமான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மொத்தம் நான்கு இடங்களில் அகழ்வாழ்வுக்கான குழிகள் தோண்டப்பட்டுள்ளன என்றும் இதுவரை நானூறுக்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“அவற்றுள் பல்வேறு விளையாட்டு பொருள்களும் அடங்கும். பெண்கள் விளையாடக்கூடிய வட்டச்சில்லுக்கள், கூம்பு வடிவிலான ஜாடிகள், பானைகளின் வடிவத்தை உருவாக்கும் கருவிகள், பானை ஓடுகள் ஆகியவை கிடைத்துள்ளன.
“தங்கத்திலான சிறு தகடு, செம்பு குங்குமச்சிமிழ், ஆணி போன்ற தண்டுப் பகுதிகள், ஏராளமான பல்வேறு கற்களால் செய்யப்பட்ட மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன,” என்று கண்காணிப்பாளர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.
இந்த அகழாய்வுப் பணியின்போது ராஜராஜன் சோழர் காலத்து நாணயம், சோழர்களின் கைவண்ணத்தில் உருவான செம்புப் பொருள்கள் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஆய்வாளர்கள், வடக்குப்பட்டு ஊராட்சியில் மேலும் பல பல்லவர்கள், சோழர் கால தொல்பொருள்கள் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.