சென்னை: நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் புகைபிடித்த ஆடவர், சென்னை விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.
குவைத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 38,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
அந்த விமானத்தில் பயணம் செய்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த முகம்மது சதாம் என்ற ஆடவர் திடீரென தனது சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த சிகரெட்டை எடுத்து புகைக்கத் தொடங்கினார்.
இதனால் விமானத்தில் இருந்த 183 பயணிகளும் விமானக் குழுவினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
விமானத்தில் புகைபிடிக்க அனுமதியில்லை என விமானப் பணியாளர்கள் அவருக்கு எடுத்துக்கூறினர். பின்னர் கடும் எச்சரிக்கையும் விடுத்தனர்.
ஆனால் 32 வயதான சதாம் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. அவர் தொடர்ந்து புகைபிடிக்க விமானப் பணியாளர்கள் தெரிவித்த புகாரின் பேரில், சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார் தலைமை விமானி.
இதனையடுத்து, அந்த விமானம் திங்கட்கிழமை இரவு சென்னையில் தரையிறங்கியதும், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனப் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக விமானத்துக்குள் ஏறி சதாமைச் சுற்றி வளைத்தனர். பின்னர் அவர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் காரணமாக விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.