சென்னை: இந்திய அளவில் பொருள்களை ஏற்றுமதி செய்வதில் தமிழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளதாக மத்திய நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டு அட்டவணை அறிக்கையை நிதி ஆயோக் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
அதன்படி கடந்த 2022ஆம் ஆண்டுக்கான பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெர்ரி தெரிவித்துள்ளார்.
தமிழகம் ஒட்டுமொத்தமாக 80.89 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் உள்ளது என்றும் மகாராஷ்டிரா (78.20), கர்நாடகா (76.36), குஜராத் (73.22) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களின் தனித்துவமான முயற்சி, அவற்றின் புவியியல் சார்ந்த சாதக அம்சங்கள், மாநிலங்களுக்கு இடையேயான போட்டி ஆகியன காரணமாக நாட்டின் ஏற்றுமதி விகிதம் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள சுமன் பெர்ரி, ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டு அட்டவணைத் தயாரிப்பில் ஒவ்வொரு துறை வாரியான ஏற்றுமதி அளவீடுகளும் மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மாநில அரசின் கொள்கை, வர்த்தகத்திற்குரிய சூழல், ஏற்றுமதி அதிகரிப்புக்கான நடவடிக்கை, ஏற்றுமதி செயல்பாடுகள் ஆகிய அம்சங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் புள்ளிவிவரத் தயாரிப்புக்கு 56 விதமான காரணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் நிதி ஆயோக் குறிப்பிட்டுள்ளது.
“ஒட்டுமொத்தத்தில் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய மாநிலங்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தன. அந்த வகையில் தமிழகத்தில் பெருமளவு கடலோரப் பகுதி உள்ளது சாதக அம்சமாகும். மேலும், சென்னைத் துறைமுகம், தூத்துக்குடி துறைமுகம் ஆகியன ஏற்றுமதி அதிகரிப்புக்கான முக்கியக் காரணிகளாகும்,” என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெர்ரி மேலும் கூறியுள்ளார்.
இதனிடையே, தொழில் நிறுவனங்கள் கட்டமைப்புக் குறியீட்டில் தமிழகம் 97.21 புள்ளிகளை எடுத்துள்ளது என்றும் ஏற்றுமதிக் குறியீட்டில் 73.68 புள்ளிகளும், ஏற்றுமதி செயல்பாட்டில் 63.34 புள்ளிகளும் எடுத்துள்ளது என்றும் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
“நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு ஒன்பது விழுக்காடாக உள்ளது. ஆட்டோமொபைல், ஜவுளி, இயந்திர பாகங்கள் உள்ளிட்டவை தமிழகத்திலிருந்து ஏற்றுமதி ஆகின்றன. கடல் உணவு, வேளாண் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதியிலும் தமிழகத்தின் பங்களிப்பு கணிசமாக உள்ளது.
“மின்னணுப் பொருள் ஏற்றுமதியில் முதலிடம் பிடித்துள்ள தமிழகம் தற்போது ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டிலும் முதலிடத்தைப் பிடித்து பீடு நடை போடுகிறது,” என்று அமைச்சர் ராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.