தூத்துக்குடி: ஆதிச்சநல்லூர் அகழாய்வு நடவடிக்கையின்போது ஒரே தாழியில் இருந்து இரண்டு மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.
கீழடி, ஆதிச்சநல்லூர், வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் ஏராளமான தொல்பொருள்கள் கிடைத்து வருகின்றன.
கீழடியில் மேலும் இரண்டு குழிகள் தோண்டப்படுகின்றன. இதன் மூலம் அகழாய்வுப் ணிகள் தீவிரமடைந்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. மத்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெறும் இந்தப் பணியில் ஏராளமான ஆய்வாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழிகளை திறந்து, அவற்றில் காணப்படும் பொருள்களை ஆவணப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி ஒன்றை திறந்துபார்த்தபோது அதில் இரண்டு மூடிகள் காணப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“அந்த மூடிகளையும் திறந்து பார்த்தபோது, இரண்டு மண்டை ஓடுகள், முதுகெலும்பு, கை, கால் எலும்புகள் காணப்பட்டன. மேலும், சிறு பானைகள், இரும்பால் ஆன உளி ஆகியவையும் இருந்தன.
“அவ்விரண்டு மண்டை ஓடுகளும் கணவன், மனைவிக்கு உரியவையா அல்லது தாய், குழந்தைக்கு உரியவையா என்பது தெரியவில்லை. இது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம்,” என ஆதிச்சநல்லூரில் முகாமிட்டுள்ள தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.