தருமபுரி: தருமபுரி மாவட்டத்தின் பாலக்கோடு அருகேயுள்ள மொரசுப்பட்டி கோயிலில் திருவிழா பட்டாசு வெடித்தபோது நாட்டு வெடிகுண்டு மூட்டை ஒன்று தீப்பற்றிக் கொண்டது.
அந்த மூட்டை வெடித்துச் சிதறியதில் அருகேயிருந்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். வியாழக்கிழமை மாலை நடந்த அந்தச் சம்பவத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தருமபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் விஜயகுமார் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த சிறுமி யாஷிகா, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
காயம் அடைந்த மற்றவர்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து பாலக்கோடு காவல்நிலைய அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

