சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கையை அதிமுக உறுதியாக ஆதரிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமென அதிமுக வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும் என்றும் இத்தகைய தேர்தல் நடைமுறை செயல்பாட்டுக்கு வந்தால் திட்டங்களைவிட வளர்ச்சியே முக்கியமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“புதிய தேர்தல் நடைமுறை எந்த அரசும் கொள்கைகளைத் திறம்படச் செயல்படுத்துவதற்கு நீண்டகால இடையூறு இல்லாத ஆட்சியை வழங்கும். நாட்டின் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிப்பதுடன், அரசியல் ஸ்திரத்தன்மையைத் தவிர்க்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கை தேர்தல் நேரம், பெரும் செலவை மிச்சப்படுத்தும்,” என்று எடப்பாடி பழனிசாமி மேலும் கூறியுள்ளார்.
நாட்டில் நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
புதிய தேர்தல் நடைமுறையை ஓபிஎஸ் தரப்பும் ஆதரித்துள்ளது.

