கோவை: கோவை மத்திய சிறைச்சாலையில் தினமும் ஒரு திருக்குறளைக் கைதிகளில் ஒருவர் ஒலிபெருக்கி மூலம் வாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கைதிகளிடம் நல்லெண்ணத்தை அதிகரிக்கும் வகையிலும் திருத்தும் வகையிலும் கல்விக்கூடம் மூலம் கற்பித்தல், நூலகம் மூலம் வாசிப்புத்திறனை மேம்படுத்துதல், யோகா பயிற்சி, உடற்பயிற்சிகள் அளித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, திருக்குறள் வாசிக்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள், குண்டர் தடுப்புப் பிரிவுக் கைதிகள், உயர் பாதுகாப்புப் பிரிவுக் கைதிகள் என 1,500க்கு மேற்பட்டோர் இச்சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் வெவ்வேறு கட்டடங்களில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
அன்றாடம் காலை 7 மணிக்கு கைதிகளில் ஒருவர் ஒலிபெருக்கியில் ஒரு திருக்குறளையும் அதன் பொருளையும் வாசிப்பார். அதைத்தொடர்ந்து அறிஞர்களின் சிந்தனைத்துளிகள், அன்றைய தினத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகள், தன்னம்பிக்கைப் பொன்மொழிகள் ஆகியவை வாசிக்கப்படும்.
சிறைத்துறை நிர்வாகத்தினர் இவற்றைத் தயார் செய்து கைதியிடம் அளிப்பர். அவர் கட்டுப்பாட்டு அறையில் உள்ள ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி வாசிப்பார். இந்த மாதம் முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கைதிகளை நல்வழிப்படுத்த இத்திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்தது.