விழுப்புரம்: மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் சட்டத் துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் கடந்த 7ஆம் நடந்த அதிமுக கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாகப் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மதிப்பையும், மாண்பையும் குறைக்கும் வகையில் தரக் குறைவாகவும், அவதூறாகவும் சி.வி.சண்முகம் பேசியுள்ளார். எனவே, அவர் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர் டி.எஸ்.சுப்பிரமணியம் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, வழக்கு விசாரணை அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறும் என்றும், அன்று சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

