காவிரிப் பிரச்சினை: கர்நாடகாவில் போராட்டம் வலுக்கிறது

2 mins read
8e75bb1b-0996-44c9-80f3-99393cade3ce
கர்நாடகம் - தமிழகம் எல்லையில் உள்ள ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த புளிஞ்சூர் சோதனைச்சாவடிக்கு அருகே தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கக்கூடாது என்று சாலையில் படுத்துக்கொண்டு போராடும் கர்நாடக விவசாயிகள். - படம்: ஊடகம்

மண்டியா: காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையை கண்டித்து கர்நாடகாவில் விவசாயிகள், கன்னட அமைப்பினரின் போராட்டம் வலுத்து வருகிறது.

காவிரி ஒழுங்காற்றுக் குழு, கர்நாடக அணைகளில் நீர் இல்லாத நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

டெல்லியில் நடந்த காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று 15 நாட்களுக்கு காவிரியில் வினாடிக்கு 5,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

இது கர்நாடக விவசாயிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விவசாய சங்கத்தினர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட தொடங்கி உள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை மண்டியாவில் விவசாய சங்கத்தினா் டயர்களை எரித்தும், காவிரி ஆற்றில் இறங்கியும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் 2வது நாளாக புதன்கிழமையும் மண்டியாவில் விவசாய சங்கத்தினர் காவிரி ஒழுங்காற்றுக் குழுவைக் கண்டித்துப் போராட்டம் நடத்தினர்.

இதேபோல், பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கும்பலகோடு பகுதியில் கன்னட அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் காவிரியில் தமிழகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட திறக்கக்கூடாது என வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.

மண்டியாவில் மாவட்ட விவசாய சமிதியினர் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் காவிரியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட தமிழகத்துக்கு செல்லக் கூடாது என்றும், இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்தநிலையில் புதன் கிழமை காலை கர்நாடக விவசாயிகள் சாம்ராஜ்நகர் மாவட்ட கரும்பு விவசாயிகள் சங்கத்தலைவர் பாக்கியராஜ் தலைமையில் கர்நாடகம் - தமிழகம் எல்லையில் உள்ள ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த புளிஞ்சூர் சோதனைச்சாவடிக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று முழக்கம் எழுப்பியடி சோதனைச்சாவடியை முற்றுகையிட்டனர். அதன்பிறகு சாலையில் படுத்துக்கொண்டு மறியலில் ஈடுபட்ட 40க்கு மேற்பட்டோர் பேர் கைது செய்யப்பட்டனர்.

வாட்டாள் நாகராஜ்: தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பெங்களூரு அருகே அத்திப்பள்ளியில் கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உருவப்படங்களை கிழித்து எறிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட, 20 பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டவர்களை அத்திப்பள்ளி காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் கர்நாடக அணைகளின் நீர் இருப்பு நீதிமன்ற மேற்பார்வையில் அளவிடப்பட வேண்டும் என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்