சென்னை: தமிழ்நாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம்’ பெரும் வரவேற்புக்கு இடையே வெள்ளிக்கிழமை தொடங்கியது.
‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ என்ற அந்தத் திட்டத்தை காஞ்சிபுரத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அந்தத் திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.12,000 கோடி (S$1.97 பில்லியன்) ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் மூலம் 1.06 கோடி குடும்பத் தலைவிகள் மாதாமாதம் தங்கள் வங்கிக் கணக்குகளில் ரூ.1,000 பெறுவார்கள்.
இந்தியாவில் இந்த வகைத் திட்டம் இதுவரை வேறு எந்த மாநிலத்திலும் தொடங்கப்பட்டதில்லை என்றும் முதன்முதலாக இப்போதுதான் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் 13 குடும்பத் தலைவிகளுக்கு ஏடிஎம் அட்டைகளையும் முதல்வர் அளித்தார்.
மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அமைச்சர்கள் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாடு முழுவதும் பணத்தைப் பெற்றுக்கொண்ட குடும்ப மாதர்கள் மகிழ்ச்சியில் திளைத்ததாக ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டன.
ஏராளமான வங்கிக் கணக்குகளில் ஒரே நேரத்தில் பணம் போடவேண்டி இருப்பதால் ஏற்படக்கூடிய தொழில்நுட்பக் கோளாறுகளைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் வியாழக்கிழமையே பலரின் கணக்குகளிலும் அரசாங்கம் பணத்தைப் போட்டது.
திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசிய முதல்வர், தான் 2021ல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது போதிய பணம் இல்லாததால் உடனடியாக இந்தத் திட்டத்தைத் தொடங்க முடியவில்லை என்றும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பலனடைய தகுதி உள்ள குடும்பத் தலைவிகள் யாராவது இதுவரை விண்ணப்பிக்காமல் இருந்தால் அவர்கள் இன்னும் ஒரு மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
“குடும்பத் தலைவிகள் வீடுகளில் கடுமையாகப் பாடுபடுகிறார்கள். இருந்தாலும் அதற்கான போதிய அங்கீகாரம் இல்லை.
“குடும்பத் தலைவிகளுக்கு அரசாங்கம் மாதாமாதம் தரும் ரூ.1,000 இரண்டு நோக்கங்களை நிறைவேற்றும். ஓய்வின்றி மாதர்கள் படும்பாட்டை அது அங்கீகரிக்கும்.
“மாதர்கள் சுயமரியாதையுடன் வாழ உதவும்,” என்று திரு ஸ்டாலின் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்தில் பதிவதற்கான நடைமுறையை ஜூலை 24ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.
ஆகஸ்ட் 20ஆம் தேதிவரை இரண்டு கட்டங்களாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 1.63 கோடி விண்ணப்பங்கள் குவிந்தன. அவற்றில் 1.06 கோடி விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
வங்கிகளுக்குப் பணம் போய் சேர்வதை உறுதிப்படுத்த முதல் ரூ.1 அனுப்பி சோதிக்கப்பட்டது.
இந்த உதவித்திட்டம் தமிழ்நாட்டின் கூட்டுறவு வங்கிகளை உசுப்பிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.