எடப்பாடி எச்சரிக்கை: கடவுளே ஆனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாமல் போய்விடும்

எடப்பாடி எச்சரிக்கை: கடவுளே ஆனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாமல் போய்விடும்

2 mins read
3a4d0797-fb5f-445e-b83e-5fef0792bb43
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் புதுடெல்லியில் வியாழக்கிழமை இரவில் சந்தித்துப் பேசினர். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ யோசனை நடைமுறைப்படுத்தப்பட்டு அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலையும் நடத்த வேண்டும்.

இல்லை எனில் கடவுளே வந்தாலும் தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தலைநகர் புதுடெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய உடனேயே அவர் அவ்வாறு கூறினார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் யோசனையை அதிமுக முழுமையாக ஆதரிக்கிறது என்று ஏற்கேனவே எடப்பாடி தெரிவித்து இருக்கிறார்.

முன்னாள் அதிபர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டு உள்ள குழு அந்த ஏற்பாடு தொடர்பில் விரைந்து முடிவு எடுத்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலின்போது நடப்புக்கு வரும் என்று நம்புவதாக அவர், கூறினார்.

திமுகவைத் தோற்றுவித்த முன்னாள் முதல்வர் திரு சிஎன் அண்ணாதுரையின் பிறந்த நாள் கொண்டாட்டம் சென்னையில் நடந்தது.

அதில் கலந்துகொண்டு பேசிய அவர் தமிழகத்தில் திமுக அரசு அகற்றப்பட வேண்டும். அதற்கு ஒரே நாடு ஒரே தேர்தல்தான் வழி என்றார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இரவு நேரத்தில் அமித்ஷாவின் இல்லத்தில் 20 நிமிடங்களுக்கு மேல் பேச்சு நடத்தினர்.

அவர்கள் தொகுதிப் பங்கீடு பற்றி விரிவாகப் பேசியதாகத் தெரிகிறது. 2024ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த சந்திப்பு வியாழக்கிழமை இடம்பெற்றது.

ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்காக எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து அமித் ஷாவை வாழ்த்தினார்.

அதிமுக-பாஜகவுக்குத் தமிழகத்தில் சாதகமான தொகுதிகள் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. மக்களவைத் தேர்தல் வியூகம் குறித்தும் அவர்கள் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்