ஓசூர்: காவிரித் தண்ணீரைத் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து ஓசூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
கர்நாடக மாநில எல்லையில் ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் எராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் அங்கிருந்து பேரணியாக கர்நாடக மாநில எல்லையை நோக்கி காலிக் குடங்களுடன் அவர்கள் அனைவரும் புறப்பட்டனர்.
அப்போது, கர்நாடக அரசுக்கு எதிராக முழக்கமிட்டபடி அவர்கள் சென்றனர். ஓசூர் உள்வட்ட சாலை சந்திப்பு அருகே பேரணி சென்றபோது, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினர் விவசாயிகளைத் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, விவசாயிகள் அப்பகுதியில் உள்ள துணைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் நீடித்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அதன் பின்னர் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.