சென்னை: பாஜகவின் சோதனை பூச்சாண்டிக்கெல்லாம் அதிமுக பயப்படாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த சில கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு குறிப்பிட்டார்.
அதிமுக தற்போது பாஜக வுடன் கூட்டணியில் இல்லை என கடந்த 18ஆம் தேதி அறிவித்த நிலைப்பாட்டில் இதுவரை எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றார் அவர்.
அதிமுகவும் அதன் தலைவர்களும் எத்தனையோ சோதனைகளை கடந்து வந்திருப்பதாகக் குறிப்பிட்ட ஜெயக்குமார், அவற்றால் அதிமுகவுக்கு தொய்வு ஏற்பட்டதில்லை என்றார்.
“குறிப்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது வழக்கு, முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு எனப் பல இருந்தாலும், எங்களது கட்சி இதுவரை பின்னடைவைச் சந்தித்ததில்லை.
“மக்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுவது எங்களின் கடமை. அதனை நோக்கி செல்கிறோம். அதேபோல, தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை என்று ஒன்று உள்ளதை தமிழக பாஜகவினர் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்,” என்றார் ஜெயக்குமார்.
“திங்கட்கிழமை எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. அக்கூட்டம் நடைபெறவுள்ள சூழலில் என்னால் வேறு எந்த கருத்தும் தெரிவிக்க இயலாது. ஒருநாள் காத்திருந்தால், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப் படும் முடிவுகளை ஊடகங்களுக்குத் தெரிவிக்கிறேன்,” என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அதிமுக, பாஜக இடையே விரிசல் அதிகரித்து வருகிறது.