சென்னை: நிலம் வாங்குவதற்கு பத்திரம் பதிவு செய்யும்போது வாங்கப்படும் நிலத்தின் புகைப்படமும் அதன் புவியியல் விவரங்களும் பத்திரத்தில் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று பத்திரப் பதிவுத்துறை அறிவித்துள்ளது.
இந்த நடைமுறை அக்டோபர் 1ஆம் தேதி அமலுக்கு வருகிறது. இதுநாள் வரை சொத்துகளைப் பதிவு செய்யும் போது நிலம், வீடுகளின் புகைப்படம் சேர்ப்பது இல்லை.
வீடுகளைப் பத்திரப்பதிவு செய்யும் போது காலி மனை என்று கூறி பதிவு செய்யப்படுகிறது. இதனால் ஏற்படும் வருவாய் இழப்பைத் தவிர்க்கும் வகையில் அக்.1ஆம் தேதி முதல் நிலங்களின் புகைப்படம், புவியியல் விவரங்களுடன் பத்திரப் பதிவுத் துறை தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வருகிறது.
பத்திரப்பதிவுக்கு வரும்போது சொத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். சொத்தில் உள்ள கட்டடங்கள் போன்றவற்றிக்கு முழுமையான முத்திரைத்தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்துவதற்கான நடவடிக்கையே இந்த புதிய நடைமுறை ஆகும் என்று கூறப்படுகிறது.

