தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அண்ணாமலையை மாற்றும்படி கோரவில்லை: எடப்பாடி விளக்கம்

3 mins read
a243abe7-b099-45e6-b3e2-ff3be9c7aeb1
திரு எடப்பாடி பழனிசாமி. - படம்: இந்திய ஊடகம்

எடப்பாடி: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று அதிமுக கூறியதாக தெரிவிக்கப்படும் கருத்துகள் தவறானவை. நாங்கள் அத்தகைய கோரிக்கைகள் எதுவும் வைக்கவில்லை,” என்று கூறியுள்ளார்.

அதேபோல், பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் வேண்டும் என்று அவர்களும் எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை என்றார் அவர்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் புதன்கிழமை செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

அப்போது அவரிடம், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிவிட்ட நிலையில், பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்; அதை மறுபரிசீலனை செய்வீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த பழனிசாமி, “அது அவர்களின் விருப்பம். ஏற்கெனவே நான் தெளிவுபடுத்திவிட்டேன். செப்டம்பர் 25ஆம் தேதி, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது.

“அந்தக் கூட்டத்தில், இரண்டு கோடி தொண்டர்களின் உணர்வுகளை அவர்கள் தெரிவித்தார்கள். அதன் அடிப்படையில், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவது தொடர்பில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,” என்றார்.

அதிமுகவும் பாஜகவும் தனித்தனியாக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது அல்லவா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், “மக்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. வாக்களித்த பிறகுதான் முடிவு தெரியும். எங்களைப் பொறுத்தவரை, அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்,” என்று திரு பழனிசாமி குறிப்பிட்டார்.

“கடந்த 2021 தேர்தலின்போது, திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் 524 அறிவிப்புகளை தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிட்டார். அவற்றில் 10 விழுக்காட்டைக்கூட நிறைவேற்றவில்லை. ஆனால், 95 விழுக்காட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக ஊடகங்களில் அவர் பொய்யுரைத்து வருகிறார்.

“இந்த இரண்டரை ஆண்டுகாலத்தில் மின்கட்டணம், வீட்டுவரி, அத்தியாவசியப் பொருள்கள் விலை இவையெல்லாம் உயர்ந்துள்ளன. மக்கள் வாழ்க்கை நடத்துவதே சவாலாக இருந்து வருகிறது. இந்த சூழலில் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் எங்களது தலைமையில் அமைக்கப்படும் கூட்டணிக்கு மிகமிகச் சாதகமாக இருக்கும்,” என்றார் அவர்.

2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜக அழுத்தம் கொடுத்ததால்தான் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியதா என்ற கேள்விக்கு, “அது தவறான செய்தி. எங்கள் கட்சியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, அதை ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டார். அப்படி எதுவும் நடக்கவில்லை.

“பாஜகவில் மத்தியில் உள்ள தலைவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் நரேந்திர மோடி உட்பட யாரும் எங்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் நடந்த சில நிகழ்ச்சிகள் அதிமுக தொண்டர்களின் மனங்களைக் காயப்படுத்திவிட்டன.

“ஒரு கட்சி வளமாக, செழிப்பாக தேர்தலில் வெற்றிபெறுவதற்கு அதன் தொண்டர்கள் உழைக்க வேண்டும். தலைவர்களை மட்டும் வைத்துக்கொண்டு கட்சி நடத்த முடியாது. எனவே, எங்கள் தொண்டர்களின் உணர்வுகளை மதித்துத்தான் நாங்கள் விலக முடிவு எடுத்தோம்,” என்று திரு பழனிசாமி விளக்கினார்.

அதிமுக தலைமையிலான கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலிலும் 2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்