சென்னை: இந்தியாவின் விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ, தமிழ்நாட்டில் ஏவுகணை உந்து தளத்தை அமைக்கிறது.
அந்தப் புதிய தளம், தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டிணத்தில் சுமார் இரண்டு ஆண்டுகளில் அமைக்கப்படும்,
அந்தத் தளம், சிறிய வகை துணைக்கோள உந்து தளமாக இருக்கும். தனியார் துறை உருவாக்கும் துணைக்கோளங்கள் அங்கிருந்து மேலே கொண்டு செல்லப்படும்.
புதிய தளத்தை அமைக்க சுமார் 2,000 ஏக்கர் நிலம் பெறப்பட்டு உள்ளது. அதற்கான தொகை ஒதுக்கப்பட்டுவிட்டது. திட்டமும் தயாராகிவிட்டது.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் அந்தத் தளம் அமைக்கப்பட்டுவிடும் என்று இந்திய தேசிய விண்வெளி அங்கீகார மையத்தின் தலைவர் டாக்டர் பவான் கோயங்கா அக்டோபர் 10ஆம் தேதி தெரிவித்தார்.
இஸ்ரோ அமைப்பு இப்போது ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுகணை உந்து தளத்தைக் கொண்டுள்ளது. அங்கிருந்து பிஎஸ்எல்வி, எல்எம்வி3 ரக ஏவுகணைகள் பாய்ச்சப்படுகின்றன.

