சென்னை: கடந்த மூன்று நாள்களில் சென்னையில் இருந்து 480,000 பேர் வெளியேறி உள்ளனர்.
ஆயுத பூசை உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து நான்கு நாள்களுக்கு விடுமுறை என்பதால் சென்னையில் வேலை பார்க்கும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.
இதை கவனத்தில் கொண்டு தமிழக போக்குவரத்து துறை மூன்று நாள்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்கியது. இதைப் பயன்படுத்தி மூன்று நாள்களில் 4.8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.
ஆண்டுதோறும் பண்டிகைக் காலத்தின்போது இவ்வாறு சிறப்பு பேருந்துகளை இயக்குவது வழக்கமாக உள்ளது.
இம்முறை கடந்த சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் திங்கட்கிழமை ஆயுத பூசை, செவ்வாய்க்கிழமை விஜயதசமி என்பதாலும் நான்கு நாள்களுக்கு தொடர்ச்சியாக நான்கு நாள்கள் விடுமுறை அமைந்துள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்குச் சென்று பெற்றோர், உறவினர்கள், நண்பர்களைச் சந்தித்துள்ளனர்.
பேருந்துகளில் மட்டுமல்லாமல், ரயில் மூலமாகவும் நூற்றுக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.
இதற்கிடையே, விடுமுறை கழித்து மீண்டும் சென்னை திரும்புகிறவர்களுக்காக தமிழக போக்குவரத்து துறை நூற்றுக்கணக்கான சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக தெரிவித்துள்ளது.
குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.