திருப்பூர்: காரியாபட்டி அருகே 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஈமச்சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தொல்லியல் கள ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களான தாமரைக்கண்ணன், ஸ்ரீதர் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் காரியாபட்டி எஸ்.தோப்பூரில் முகாமிட்டு தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
முற்காலத்தில் சுக்காம்பட்டி எனும் ஊர் இருந்து பின்னர் அழிந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள ஆய்வாளர்கள், இங்குள்ள கிணற்றில் முதுமக்கள் தாழிகள் பல சிதைந்து கிடப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
“இறந்தவர்களை பெரிய மண் தாழியில் இட்டு முன்னோர்கள் புதைத்துள்ளனர். இங்கு கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் மூன்றடி ஆழத்தில் புதைந்து கிடக்கின்றன.
“அத்துடன் சிறிது தூரத்தில் கல்வட்டம் காணப்பட்டது. இறந்தவர்களை தாழிகளிலோ, மண்ணிலோ புதைத்த பின் மேல்புறத்தில் அடையாளப்படுத்த பெரும் பாறைகளை நட்டு வைப்பர். இந்தக் கற்பாறைகளை இன்றளவும் மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்,” என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் தாமரைக்கண்ணன் தெரிவித்தார்.
காரியாபட்டி அருகே சின்னம்மாள் என்ற கோவில் இருப்பதாகவும் அங்கு ஏராளமான நடு கற்கள் நட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவற்றில் சிற்ப வேலைப்பாடுகள், தமிழ் எழுத்துகள் கல்வெட்டுகளாக இடம்பெற்றுள்ளன என்றும் இதன் நீத்தோர் வழிபாட்டை பழங்காலம் முதல் இன்று வரைமக்கள் தொடர்ந்து மக்கள் பின்பற்றியதை அறிய முடிகிறது என்றும் தாமரைக்கண்ணன் கூறினார்.

