சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிகள் நால்வர் வெளிநாட்டுக்குப் பண்டிகைக்கால இனிப்பு வகைகளைக் கொண்டுசெல்ல விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தடை விதித்தனர்.
அதுமட்டுமன்றி திருப்பதி லட்டு போன்ற கோவில் பிரசாதங்களுக்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணம் மேற்கொள்வோர் இடையே இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 19ஆம் தேதி சென்னையில் இருந்து தாய் ஏர்வேஸ் விமானத்தில் தாய்லாந்து தலைநகர் பேங்காக் புறப்படுவதற்குச் சென்னை அனைத்துலக விமான நிலையத்திற்குப் பயணிகள் நால்வர் சென்றனர். அவர்களது பயணப்பெட்டிகளில் இனிப்புப் பலகாரங்கள் இருந்தன. அவற்றை எடுத்துச் செல்லக்கூடாது என சுங்கத் துறையினர் திட்டவட்டமாகக் கூறிவிட்டதாக சன் நியூஸ் உள்ளிட்ட தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.
இதனால் சென்னை-பேங்காக் பயணத்தை ரத்து செய்துவிட்டு மும்பையில் இருந்து அதே இனிப்பு வகைகளுடன் அந்த நால்வரும் பேங்காக் சென்றனர்.
பின்னர் சென்னை திரும்பிய அவர்கள், “இனிப்புப் பலகாரங்களை எடுத்துச்செல்ல நீங்கள் தடை விதித்தீர்கள். ஆனால் மும்பை விமான நிலையத்தில் எப்படி அனுமதித்தார்கள்? இந்தியா முழுவதும் ஒரே சட்டம்தானே?” என்று சுங்கத்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கிடையே, இலங்கைக்குச் செல்லும் பயணிகள் லுங்கி, காட்டன் புடவைகள், நைட்டி, வேஷ்டிகள் எடுத்துச்செல்லவும் சென்னை சுங்கத்துறையினர் தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் திருச்சி மற்றும் பெங்களூரில் இருந்து பயணிகள் இலங்கைக்கு இவற்றைக் கொண்டு செல்கின்றனர்.
திருச்சி, பெங்களூரு விமான நிலையங்களில் அனுமதிக்கப்படும் இப்பொருள்களுக்கு சென்னையில் மட்டும் தடை விதிப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நாங்கள் ஊடகங்களிடம் பேச மாட்டோம். சுங்க விதிகளின்படி செயல்படுகிறோம். மற்ற விமான நிலையங்களில் எப்படி அனுமதிக்கின்றனர் என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது,” என்று கூறியதை டிடி நெக்ஸ்ட் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியது.
ஆனால், இது ஒரு தனிப்பட்ட சம்பவம் என்று சுங்கத்துறையினர் கூறியதாகவும் அந்த பயணிகள் நால்வரும் தலா 35 கிலோகிராம் எடைகொண்ட இனிப்புகளை வைத்திருந்ததாக அதிகாரிகள் சொன்னதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டது.
சுங்கத்துறையினரின் இந்த நடவடிக்கை சரியானதன்று எனக் கருத்துரைத்த சுங்கத்துறை முன்னாள் அதிகாரிகள், குறிப்பிட்ட சில பொருள்களை எடுத்துச்செல்ல கெடுபிடி விதிப்பதால் சென்னை விமான நிலையத்திற்குப் பயணிகளின் எண்ணிக்கை குறையும் என எச்சரித்தனர்.
“போதிய பயணிகள் இல்லை என்று விமான நிறுவனங்கள், விமானங்களை ரத்து செய்யும் நிலை ஏற்படக்கூடும்,” என்று அவர்கள் கூறினர்.
“விமான நிலையத்திற்கு மிரட்டல்கள் போன்ற அவசர காலத்தில் மட்டும் அல்வா, ஊறுகாய், ஜாம் போன்ற திரவப் பொருள்களை எடுத்துச்செல்ல பயணிகளுக்குத் தடை விதிக்கப்படும். அதை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பார்களே தவிர சுங்கத்துறையினர் அல்ல,” என்றும் அவர்கள் விவரித்தனர்.