சென்னை: சனாதன சர்ச்சை தொடர்பாக தம் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் உரிய ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என அமைச்சர் உதயநிதி தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இல்லையெனில் தமக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் உதயநிதி தரப்பு நீதிபதியைக் கேட்டுக்கொண்டது.
சதாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த சில கருத்துகள் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளன. இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்ட வழக்்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
செவ்வாய்க்கிழமையன்று நடந்த விசாரணையின்போது சனாதன விவகாரத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் ஆக்குவதாக அமைச்சர் உதயநிதி தரப்பு தெரிவித்தது.
“சனாதன பேச்சு தொடர்பாக ஆதாரங்களை சமர்பிக்காததால் ‘கோ வாரண்டோ’ வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களிடமே ஆதாரங்களைக் கேட்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது.
“மனுதாரர்கள்தான் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்,” என என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டதாக இந்து தமிழ் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு உள்ளிட்டோருக்கு எதிரான இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.