சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், பத்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் ஐம்பது அடியை எட்டியுள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஏஷியாநெட் தமிழ் ஊடகச் செய்தி தெரிவித்துள்ளது.
கடந்த சில நாள்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கே.ஆர்.பி. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், தற்போது அதன் பாதுகாப்பு கருதி 439 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் மேற்குறிப்பிட்ட ஐந்து மாவட்டங்களில் ஆற்றுக் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆற்றில் குளிக்கவும் கால்நடைகளை ஆற்றுக்கு அழைத்துச் செல்லவும் வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வைகை அணைக்கு நீர்வரத்து வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு 49 அடியாக இருந்த நீர்மட்டம் மெல்ல உயரத் தொடங்கி தற்போது 66 அடியை எட்டியுள்ளது.
இதையடுத்து, ஐந்து மாவட்டங்களில் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி நீர்வளத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பலத்த மழை காரணமாக நெல்லை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மற்ற அணைகளின் நீர்மட்டமும் வேகமாக அதிகரித்து வருகின்றன.
தமிழகத்தில் நாளை (நவம்பர் 7ஆம் தேதி) வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது.
மேலும், கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல சுழற்சி, வங்கக் கடலில் இருந்து கிழக்கு திசையில் வீசும் காற்றின் வேகம் காரணமாக குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.
கனமழையால் தண்ணீர் தேங்கக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தினத்தந்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, மத்திய கிழக்கு அரபிக்கடலில் வரும் 8ஆம் தேதி அன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக கேரளா, தமிழகத்தில் மிதமான, சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அம்மையம் கூறியுள்ளது.