விடிய விடிய பெய்த அடைமழையினால் 50 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை மாவட்டத்தில் உள்ள நதி பெருக்கெடுத்து ஓடுகிறது.
நீர் நிறைந்தோடும் கௌசிகா நதியை இதனை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பலரும் பார்த்து ரசிக்கின்றனர். காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் குருடி மலையிலிருந்து உற்பத்தியாகும் கௌசிகா நதி, நொய்யல் நதியில் கலக்கும்.
இந்த கௌசிகா நதியில் கடந்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு மழைநீர் அதிக அளவில் பெருக்கெடுத்து ஓடுகின்றது.
கோவில்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் மழை பெய்யத் துவங்கியது. வெள்ளி காலை வரை இடைவிடாது தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. இதனால் அனைத்துத் தடுப்பணைகளும் முழுவதுமாக நிரம்பியதால் கௌசிகா நதிக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதனால் கௌசிகா நதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது.