சென்னை: தமிழ்நாடு முழுவதும் நீதிமன்ற அனுமதியுடன் ஞாயிற்றுக்கிழமை 55 இடங்களில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அணிவகுப்புப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்தப் பேரணிக்கு அனைத்து இடங்களிலும் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சென்னையில் குரோம்பேட்டை, கொரட்டூர், மணலி ஆகிய மூன்று இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, உடன்குடி, கன்னியாகுமரி மாவட்டம் கூனாலுமூடு, கோவை மாவட்டம் துடியலூர், கோட்டூர், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், உடுமலைப்பேட்டை, கோத்தகிரி, மரவனேரி உள்ளிட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பேரணி நடத்தப்பட்டது.
திருச்சியில் ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்க முயன்ற பாஜக தேசிய சிறுபான்மைச் செயலாளர் இப்ராகிம் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டார்.