சேலம்: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை காலை திடீரென தீப்பற்றி எரிந்தது.
அறுவை சிகிச்சை அறைக்கு அருகே உள்ள குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீயால் ஏற்பட்ட புகை அவசர சிகிச்சை வார்டு பகுதிக்குப் பரவியதால் அங்கிருந்த நோயாளிகள் அனைவரையும் ஊழியர்கள் பாதுகாப்புடன் வெளியில் கொண்டு வந்தனர்.
மருத்துவமனை வளாக காவல்துறையினரும், செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய தீயணைப்பு படை வீரர்களும் மருத்துவமனைக்கு வந்து தீ, புகை மூட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.
நல்லவேளையாக தீ விபத்தில் உயிரிழப்பு ஏதுமின்றி அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெறும் அந்த மருத்துவமனையில் நிகழ்ந்துள்ள இந்தத் தீச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தீவிபத்து குறித்து காவல்துறை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு விசாரணையைத் தொடங்கியுள்ளது.