40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்ல வேண்டும்: மு.க. ஸ்டாலின் விருப்பம்

2 mins read
20ac0a23-2530-4438-a8b7-4513fc3cee73
திமுக கூட்டணி கைகாட்டுபவரே நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க. ஸ்டாலின் திமுகவினரிடம் தெரிவித்து உள்ளார்.

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஓட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர் பாலு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.

அவர் கூறுகையில், “நாடாளுமன்றத் தேர்தலில் நாம் கைகாட்டுபவரே பிரதமராக வேண்டும்; 40 தொகுதிகளிலும் வென்றால் மட்டுமே அது சாத்தியம்.

“இவர்தான் இந்த தொகுதிக்கு என்று எதுவுமில்லை; யார் வெற்றி பெறுவாரோ அவரே வேட்பாளராக இருப்பார்.

“நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து திமுக தலைமை பார்த்துக்கொள்ளும். தேர்தல் பணிகளை முன்னெடுத்துச் செல்லுங்கள்.

“டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக அமைச்சர் கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார்.

“ஐந்து லட்சம் பேர் கலந்துகொள்ளும் அளவில் சேலம் இளைஞரணி மாநாடு இருக்க வேண்டும். 25 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட வலுவான படையாக திமுக இளைஞரணி திகழ்கிறது.

“இளைஞரணிச் செயலாளராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பணிகள் பன்மடங்கு வேகம் எடுத்திருக்கின்றன.

“மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட திட்டங்கள் பெண்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இனி எந்தக் காலத்திலும் மகளிர் வாக்குகள் நமக்குத்தான் என்பதில் எள்முனை அளவும் சந்தேகம் வேண்டியதில்லை,” என்றார் ஸ்டாலின்.

குறிப்புச் சொற்கள்