சென்னை: மழை நீருடன் எண்ணெய்க் கசிவும் சேர்ந்துகொண்டதால் வடசென்னையில் 25,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
அப்பகுதியைச் சேர்ந்த பலர் கண் எரிச்சல், சுவாசப் பிரச்சினை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய வெள்ளப்பெருக்கால் வடசென்னையில் உள்ள திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துவிட்டது.
சில இடங்களில் ஆறு அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கியதை அடுத்து அங்கு வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், தேங்கி நின்ற மழைநீருடன் எண்ணெய்க் கசிவும் சேர்ந்துகொண்டதால் பலரது வீடுகளில் சுவர்களிலும் தரையிலும் எண்ணெய்க் கறை படிந்துள்ளது. மேலும் பல்வேறு பொருள்களில் எண்ணெய்க் கறை படிந்துள்ளதால் அவற்றை மேற்கொண்டு பயன்படுத்த இயலாது என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
துணிமணிகள், புத்தகங்கள் ஆகியவற்றை மீண்டும் பயன் படுத்த முடியவில்லை என்றும் அவற்றைப் புதிதாக வாங்க பணம் இல்லை என்றும் பாதிக்கப்பட்டோர் சோகத்தை வெளிப் படுத்தினர்.
எண்ணெய்க் கசிவுக்கு எண்ணூர் பகுதியில் உள்ள சென்னை சுத்திகரிப்பு ஆலைதான் காரணம் என வடசென்னை பகுதி மக்கள் கூறுகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதி களில் இருந்து சேகரிக்கப்பட்ட தண்ணீர் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது சுத்திகரிப்பு ஆலையில் இருந்துதான் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது எனத் தெரிய வந்ததாக கூறப்பட்டது. ஆனால், அந்நிறுவனம் இதை மறுத்துள்ளது.
25,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குறிப்பாக, முதியோரும் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.