திருநெல்வேலி: மிச்சாங் புயலால் ஏற்பட்ட கனமழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது.
இப்போது பல ஊர்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விட்டனர். இருப்பினும், திருநெல்வேலியில் தாழ்வான பகுதிகளில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீர் வடியவில்லை. இதனால் அப்பகுதி மக்களின் வாழ்க்கை இன்னும் இயல்புநிலைக்குத் திரும்பவில்லை.
திருநெல்வேலியின் பல பகுதிகளில் தேங்கிய மழைநீர் வடிந்துவிட்டது. ஆனால், திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் லாலுகாபுரம் அருகே அரசன் நகர் பகுதி குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள மழைநீர் இன்னும் வடியவில்லை.
இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், தேங்கிய தண்ணீரை வடியவைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். தேங்கியிருக்கும் தண்ணீரை அங்குள்ள ஓடைக்குத் திருப்பி விடுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
இப்பகுதியில் தேங்கியிருப்பது நன்னீர் என்பதால் டெங்கி கொசு உற்பத்தியாகும் வாய்ப்பு உள்ளதாக இங்குள்ளவர்கள் அச்சம் தெரிவித்தனர்.