சென்னை: “விமர்சனம் செய்வதற்கும், வீண்பழி சுமத்துவதற்கும் எதிர்க்கட்சிகள் முனைப்புக் காட்டுவதைத் தவிர மக்களின் துயர் துடைக்க முன்வரவில்லை.
மிச்சாங் புயல் பாதிப்பை ஆய்வு செய்த மத்திய குழுவினர் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை பாராட்டினர். இது அவதூறு பரப்பி அரசியல் செய்ய நினைப்பவர்களின் கன்னத்தில் விழுந்த பளார் அறை” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், பேரிடரிலும் அரசியல் செய்யும் குணம் படைத்தவர்களைப் பொருட்படுத்தாமல் மக்கள் நலன் காக்கும் அரசு திமுக.
பேரிடரிலிருந்து மீண்ட மக்களின் மகிழ்ச்சியான மனநிலை தொடர வேண்டும். எத்தகைய இடர் வந்தாலும், அதிலிருந்து மக்களைக் காப்பதில் அக்கறையும் பொறுப்பும் கொண்ட அரசே திமுக அரசு. இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் தொடரும்.
திராவிட மாடல் அரசின் பணிகளை பிற மாநிலங்கள் கவனிக்கின்றன. பங்களா வாசலில் உள்ள பெரிய கதவு திறக்கும்வரை காத்திருக்கும் முந்தைய ஆட்சியின் நிலைமை இன்றில்லை.
தொலைக்காட்சியில் பார்த்துதான் விவரம் தெரிந்துகொண்டேன் என்று கூறும் முந்தைய அரசு நிலை இன்றில்லை. மக்கள் பிரதிநிதிகளை அணுக முடியும், கேள்வி கேட்க முடியும் என்ற ஜனநாயகப்பூர்வமான அரசு செயல்பட்டு வருகிறது என்று அக்கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.