புதுடெல்லி: தமிழக தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை தமிழக அரசுக்கு தாமதமாகவே கிடைத்தது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்மாவட்டங்களில் வானிலை மையம் கணித்ததைவிட மழைப்பொழிவும் மிக அதிகமாக இருந்தது என்று குறிப்பிட்டார்.
“வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைவிட பல மடங்கு அதிக மழை தென் மாவட்டங்களில் பெய்துள்ளது. தமிழக அரசின் நடவடிக்கைகளால்தான் பாதிப்புகள் பெருமளவு குறைந்தது,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.
தற்போது மீட்பு, நிவாரணப் பணிகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மிச்சாங் புயலின்போது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை மத்திய அரசு பாராட்டியதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
“கன மழையால் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பார்வையிட புதன்கிழமை (இன்று) நேரில் செல்கிறேன். அங்கு நேர்ந்திருப்பது பேரிடர் என்பதால் மத்திய அரசிடம் கூடுதல் நிதி கோரியுள்ளோம்,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.