தொண்டி: ராமநாதபுரம் மாவட்டத்தின் சோழியக்குடி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வது தடைபட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள மீனவர்கள் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுவிட்டு ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் கரை திரும்பவர்.
சோழியக்குடி மீனவர்கள் ஆழ்கடலில் இருந்து இறால், நண்டு, கனவாய் போன்றவற்றைப் பிடித்து வருவர். அவற்றை தூத்துக்குடியில் உள்ள கடலுணவு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் வாங்கிப் பதப்படுத்தி வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றன.
நெல்லை, தூத்துக்குடி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் , மின்சாரத்தடை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதால் போக்குவரத்து தடைபட்டதோடு, மின்சாரம் இல்லாததால் கடல் உணவுப்பொருட்களைக் பதப்படுத்தும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன் ஏற்றுமதி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது பெரிய நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் நிலையும் இல்லாததால், மழை ஓய்ந்த பின்னும் இப்பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொண்டி வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் 4.4 மில்லி மீட்டர் என்ற அளவில் குறைந்த அளவு மழை பொழிவு பதிவானது குறிப்பிடத்தக்கது.