சென்னை: தமிழக வரலாற்றில் முதன்முறையாகத் தீயணைப்புத் துறையில் பணியாற்றிய பெண் அதிகாரி ஒருவர் ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.
பிரியா ரவிச்சந்திரன் என்ற அந்த அதிகாரி 2022ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் பிரிவு அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
கடந்த 1999ஆம் ஆண்டு பொதுச் சேவை தேர்வு எழுதிய பிரியா, தமது 26வது வயதில் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைப் பிரிவில் பணியாற்றத் தொடங்கினார்.
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இதே துறையில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், மாநில அரசு அல்லாத சிவில் சர்வீஸ் ஒதுக்கீட்டில் இருந்து ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் பிரியா. இதற்கான உத்தரவை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக ஏசியா நெட் தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
கடந்த 2012ஆம் ஆண்டு அவருக்கு தமிழக அரசின் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டிலேயே இந்திய அதிபர் விருதும் பெற்றார்.
மேலும், கடந்த 2014ஆம் ஆண்டு தன்னலமற்ற சேவைக்காக பிரியா ரவிச்சந்திரனுக்கு முதல்வர் விருதும் வழங்கப்பட்டது.
பிரியாவுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.