சென்னை: ராமர் கோயில் திறப்பு விழாவை அரசியல் ஆக்கக்கூடாது என்று அதிமுக கூறியுள்ளது.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல. ஆனால், பள்ளிவாசலை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை,” என்று கூறியுள்ளார்.
திமுக இளைஞரணி மாநாடு வரும் 21ஆம் தேதி சேலத்தில் நடைபெறவிருக்கிறது. அதற்கான சுடர் தொடர் ஓட்டத்தை அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஜனவரி 18ஆம் தேதி காலை தொடங்கி வைத்தார்.
இந்த சுடர் ஓட்டம் பெத்தநாயக்கன்பாளையத்துக்கு வரும் 20ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு சென்றடைகிறது.
சேலம் மாநாட்டுத் திடல் முன்பு மாநாட்டு சுடரை மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் மற்றும் துணைச் செயலாளர்கள் பெற்றுக்கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் அதை ஒப்படைக்க இருக்கிறார்கள்.
முன்னதாக, சுடர் ஓட்டத்தை தொடங்கிவைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது அவரிடம், “ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்பது அவரவர் விருப்பம். அதை அரசியலாகப் பார்க்கக்கூடாது,” என்று அதிமுக கூறியுள்ள கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “அது அவர்களுடைய கருத்தாக இருக்கலாம். திமுக எந்த சமயத்துக்கும், நம்பிக்கைக்கும் எதிரான போக்கைக் கொண்டதல்ல என்று கலைஞர் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல. அங்கே கோயில் வருவது எங்களுக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் அங்கே இருந்த பள்ளிவாசலை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
“எங்கள் பொருளாளரும் ஏற்கெனவே இதுதொடர்பாக, “ஆன்மீகத்தையும் அரசியலையும் ஒன்றாக்காதீர்கள்,” என்று சொல்லியிருக்கிறார் என்றார். “கால் வலி இருப்பதால் ராமர் கோயில் விழாவில் பங்கேற்பது குறித்து யோசிக்கிறேன்,” என எடப்படி பழனிச்சாமி கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, இருக்கலாம், “அவர் தவழ்ந்து தவழ்ந்து செல்வதால் அவருக்கு அடிக்கடி கால் வலி வரலாம்,” என்று கூறிச் சென்றார்.

