திருச்சி: திருவரங்கம் அரங்கநாதர் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து ராமேசுவரம் புறப்பட்டார்.
சனிக்கிழமை காலை திருச்சியில் உள்ள திருவரங்கத்தின் அரங்கநாதர் கோயிலுக்குச் சென்ற பிரதமருக்கு அங்கு தங்கக் குடத்தில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர், கோயிலுக்குள் சென்று ரங்கநாத சாமியை வழிபாடு செய்த பிரதமர், கருடாழ்வார் சன்னதி, பெரிய பெருமாள் சன்னதி, தாயார் சன்னதியில் வழிபாடு நடத்தினார். அதன் தொடர்ச்சியாக தாயார் சன்னதி அருகாமையில் கம்பராமாயண பாராயணத்தை செவிமடுத்தார். அதன் பின்னர் தாயார் சன்னதியில் நவராத்திரி கொலு மண்டபத்தில் அஷ்டலட்சுமி விளக்கேற்றி வழிபாடு செய்தார்.
பிரதமர் மோடிக்கு திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் இறங்குதளம் அருகாமையில் பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் அக்கட்சித் தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புக் குழுவினர் (எஸ்.பி.ஜி) மேற்பார்வையில் 5000க்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
திருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் பிரதமருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை உடன் இருந்தனர்.
திருவரங்கம் கோவிலில் ஐந்தடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோவில் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு பயோமெட்ரிக் கருவி வைக்கப்பட்டது. அந்த அடையாள அட்டை வைத்திருந்த கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் மட்டும் மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக்குப் பின்னர் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பிரதமர் காரில் செல்லும் பாதையில் 500 மீட்டர் சுற்றளவுக்கு கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பாதுகாப்புக் காரணங்களுக்காக வெள்ளிக்கிழமை (19-01-24) மாலை 6 மணி முதல் சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணி வரை திருவரங்கம் கோவிலில் பக்தர்கள் பொது தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.