சென்னை: தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்கக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. பாஜகவை கழற்றி விட்டது விட்டதுதான் என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. தன்னை முன்னிலைப்படுத்தவே அண்ணாமலை பேசிக் கொண்டிருக்கிறார். அவர் பாஜகவை ஒருபோதும் முன்னிலைப் படுத்தவில்லை.
விரைவில் அதிமுக உடன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவோம்.
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு ஆலோசனை மேற்கொண்டது. இதில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இண்டியா கூட்டணியில் பல முரண்பாடுகள் உள்ளன. இந்தியா கூட்டணிக் கட்சிகளின் இடையே ஒருமித்த கருத்து இல்லை என்று கூறியுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி என்ற கேள்விக்குப் பதிலளித்த ஜெயக்குமார், “அக்கட்சியுடன் ஒருபோதும் கூட்டணி சேரும் எண்ணம் இல்லை. தமிழக மக்களை ஏமாற்றி தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜகவின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது. நடக்காத விஷயத்தை கூறி திசைதிருப்ப அண்ணாமலை முயற்சிக்கிறார் என்றார்.