சென்னை: செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் துறைக்கு என தனி ஆராய்ச்சிப் பள்ளியை உருவாக்க சென்னை ஐஐடி கல்வி நிலையத்தின் முன்னாள் மாணவர் 110 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
அவருக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
நாட்டின் மிக உயரிய, தரம் வாய்ந்த கல்வி நிலையங்களில் ஐஐடி கல்வி நிலையமும் ஒன்று. நாட்டின் பல்வேறு நகரங்களில் இந்த ஐஐடி மையங்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், சென்னை ஐஐடியில் ‘ஏஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியலுக்கான ஆராய்ச்சிப் பள்ளிக்கு என அம்மையத்தின் முன்னாள் மாணவரான சுனில் வாத்வானி ரூ.110 கோடி நன்கொடை அளித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
கடந்த 1975ஆம் ஆண்டு ஐஐடியில் பட்டப்படிப்பை மேற்கொண்டார் சுனில் வாத்வானி. பின்னர் சுகாதாரத்துறையில் கொண்டிருந்த ஆர்வம் காரணமாக அதில் முதலீடு செய்தார்.
இன்று அவரது நிறுவனங்கள் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள பெரும் நிறுவனங்களாக உருவெடுத்துள்ளன.
இந்நிலையில், 50 ஆண்டுகளுக்குப் பின்னர் தாம் படித்த சென்னை ஐஐடி மையத்துக்கு அவர் ரூ.110 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார். இந்திய ஐஐடி மையங்களுக்கு தனி ஒரு நபர் அதிகபட்சமாக வழங்கியுள்ள நன்கொடை இதுவாகும்.

