சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக ஆகிய திராவிட கட்சிகளும் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக இறங்கியுள்ளன.
திமுகவில் முக்கியமான கூட்டணிக் கட்சிகளில் ஒன்றாக விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் திங்கட்கிழமை பேச்சு நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூட்டணியில் விசிக பெறப்போகும் இடங்கள், சொந்த சின்னத்தில் போட்டி போன்றவை குறித்துப் பேசினார்.
மூன்று தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி என நான்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளதாக அவர் சொன்னார்.
திமுக கூட்டணியில் 10க்கும் மேற்பட்ட கூட்டணிக் கட்சிகள் இருக்கின்றன. அவரவர் கோரிக்கைகளுக்கு ஏற்ப தொகுதிப் பங்கீடுகளை முடிக்க வேண்டிய பொறுப்பு திமுக தலைமைக்கு இருக்கிறது. தனிப்பட்ட முறையில் கட்சியின் பலம் எவ்வளவு முக்கியமானதோ, அதைவிட கூட்டணி பலம் மிகவும் முக்கியம். அப்போதுதான் நமது கொள்கை பகைவர்களை வீழ்த்த முடியும் என்றார் அவர்.
காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில் விசிகவுடன் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதற்கிடையே திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, அதிமுக- பாஜக என எந்த ஒரு கட்சியுடனும் தேமுதிக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையே நடத்தவில்லை எனக் கூறியுள்ளார்.
“அதேபோல 14 லோக்சபா தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனவும் நாங்கள் நிபந்தனை விதிக்கவில்லை. நானும் அப்படி எதுவுமே சொல்லவில்லை. எங்களது மாவட்ட செயலாளர்கள் தெரிவித்த கருத்தைதான் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தேன்.
“கூட்டணி குறித்து கட்சி தலைமை இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த முடிவும் எடுக்கவில்லை. மீண்டும் ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு பின் கூட்டணி குறித்து அறிவிப்போம்,” என்று கூறினார்.