ராமநாதபுரம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டிப் பேசியுள்ளார்.
ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு நுழைய முடியவில்லை என்று அவர் திமுக பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டார்.
“ஜெயலலிதா நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழைய விடவில்லை. புதிய கல்விக் கொள்கையில் 8, 5ஆம் வகுப்புகளுக்குகூட பொதுத்தேர்வு நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
“நமது குழந்தைகள் படிக்கக்கூடாது என்பதற்காகவே புதிய தேர்வுகளை திணிக்கின்றனர். எனவே நீட் விவகாரத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டத்தான் வேண்டும்.
“எனினும் அவர் காலமான பிறகு அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வு தமிழகத்திற்குள் வந்தது,” என்றார் உதயநிதி.
நீட் தேர்வு ரத்து தொடர்பாக டெல்லியில் போராட்டம் நடத்த இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு எப்போது விலக்கு கிடைக்குமோ, அதுவே முதல் வெற்றியாகக் கருதப்படும் என்றார்.

