ராமேசுவரம்: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தின் நான்காம் நாளன்று மீனவர்கள் ராமேசுவரத்தில் இருந்து பாம்பன் வரை பேரணியாகச் சென்றனர்.
அண்மையில் ராமேசுவரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. எனினும் பின்னர் 20 மீனவர்களை அந்நாட்டின் ஊர்க்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்தது.
மெல்சன் என்ற மீனவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் இரு படகுகளின் ஓட்டுநர்களுக்கு தலா ஆறு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதனால் கவலையும் கோபமும் அடைந்த ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 17ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், போராட்டத்தின் நான்காம் நாளான செவ்வாய்க்கிழமையன்று தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்களின் பேரணி நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான மீனவர்கள் கலந்துகொண்டனர்.
பாம்பன் பகுதியில் மீனவர்களின் பேரணியை தடுத்து நிறுத்திய ராமநாதபுரம் ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
இதனால் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டதை மீனவர்கள் தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.
ஏற்கெனவே கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்கப் போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.