சென்னை: அதிமுக, பாமக இடையே மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு சுமுகமாக நடந்து முடிந்ததாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இம்முறை பாமகவுக்கு ஏழு மக்களவைத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்க அதிமுக முன் வந்துள்ளதாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுகவுக்கும் அதன் தலைமையிலான கூட்டணியில் இணைய விரும்பும் கட்சிகளுக்கும் இடையே தமாக தலைவர் ஜி.கே.வாசன் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வருகிறார். இருதரப்பு நிர்வாகிகளுடன் அவர் நேரிலும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு பேசி வந்தார்.
இதையடுத்து பாமகவின் கோரிக்கைக்கு ஏற்ப தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகும் எனத்தெரிகிறது.
இதற்கிடையே, தேமுதிகவையும் அதிமுக கூட்டணி வளையத்துக்குள் கொண்டு வர, அக்கட்சித் தலைமையுடன் ஜி.கே.வாசன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. தனது சகோதரர் சுதீஷை மாநிலங்களவை உறுப்பினராக்க வேண்டும் என்ற பிரேமலதாவின் கோரிக்கையை அதிமுக தலைமை ஏற்றுக்கொண்டதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

