சென்னை: உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் கடந்த நான்கு நாள்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சட்டக்கல்லூரி மாணவர்களை தாம் ஆதரிப்பதாக அவர் கூறியுள்ளார்.
தமிழக வழக்கறிஞர்களின் போராட்டத்தை அரசுக்கு எதிரான போராட்டமாக எதிர்கொள்ள தமிழக அரசு முனைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
“இது ஏதோ இன்று நேற்று நடக்கும் போராட்டம் அல்ல. கடந்த 2006 ஆம் ஆண்டிலேயே அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க அனுமதி கோரி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது. எனினும் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசும் பாஜகவும் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றவில்லை,” என்றார் பி.ஆர்.பாண்டியன்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இப்போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இப்போராட்டத்தை முதல்வர் எதிர்ப்பது தமிழக மக்களுக்குச் செய்யும் துரோகம் என்றார்.