சென்னை: அதிமுக-புதிய தமிழகம் கட்சிகளுக்கு இடையே புதிய கூட்டணி உறுதியாகி உள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் கிருஷ்ணசாமியைச் சந்தித்து அதிமுக கூட்டணியினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, “2024 மக்களவைத் தேர்தலில் ஒரு வெற்றிக்கூட்டணியை அமைப்பதுதான் எங்களது முக்கிய நோக்கம்.
“எங்களுக்கு எத்தனை தொகுதிகள் தேவை என்பது குறித்து அடுத்தடுத்த பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்படும். ஒரு வலுவான கூட்டணி தமிழகத்தில் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுக - புதிய தமிழகம் கட்சி இடையே வலுவான கூட்டணி உறுதியானது,” எனத் தெரிவித்தார்.
இக்கூட்டணி குறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “இபிஎஸ் தலைமையில் இக்கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும். மக்களவைத் தேர்தல் மட்டுமல்ல, சட்டமன்றத் தேர்தல் வரை இக்கூட்டணி நீடித்து தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்,” என்றார்.