சென்னை: சென்னை மாநகரில் உள்ள அனைத்து மருந்துக் கடைகளிலும் இன்னும் 30 நாள்களுக்குள் கண்காணிப்புப் படக்கருவி (சிசிடிவி) பொருத்த வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னையில் வலி நிவாரணிகள் என்ற பெயரில் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட மாத்திரைகள் மருந்துக் கடைகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், பள்ளி, கல்லூரிகளிலும் அவற்றை ஒட்டிய பகுதிகளிலும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து உள்ளது. இது தமிழக அரசுமீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மருந்துகள் பயன்பாட்டைத் தடுக்க, காவல்துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இருப்பினும், போதைப்பொருள்களையும் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரைகளையும் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது.
அதேபோல், மருத்துவர் பரிந்துரை இல்லாமலேயே கருத்தடை மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகள் உள்ளிட்டவை மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது. இவற்றைத் தடுக்கும் வகையில், சென்னை மாவட்ட நிர்வாகம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருள்கள் சட்டத்தில் இடம்பெற்றுள்ள சில அட்டவணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்துக் கடைகளிலும் சிசிடிவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சிசிடிவி பொருத்தத் தவறும்பட்சத்தில் மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.