சென்னை: இந்தியாவில் முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்றதன் மூலம் காலஞ்சென்ற முதல்வர் அறிஞர் அண்ணா தலைமையிலான திமுகவின் இளம்படை தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப் புரட்சியை நிகழ்த்திக் காட்டியதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக முதன்முதலாக ஆட்சி அமைத்த நாளை முன்னிட்டு அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், அன்று தமிழகத்தை காத்த நிலையில், இன்று நாட்டைக் காக்க வேண்டிய பெரும் பொறுப்பை சுமக்கும் அளவுக்கு திமுகவின் வலிமை கூடியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
அன்று தமிழகத்தைக் காத்தோம். இன்று மொத்த இந்தியாவின் கூட்டாட்சி, பன்முகத் தன்மையையும் மதச்சார்பின்மையையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பை நம் தோள்களில் சுமக்கும் அளவுக்கு நம் வலிமை கூடியுள்ளது.
“மீண்டும் வரலாறு படைப்போம். நாட்டைக் காப்போம்,” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மாநில அரசுக்குத் தராமல் நேரடியாக மக்களுக்கு நிதி வழங்கி வருவதாகத் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடி அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளதாக அவர் தமது சமூக ஊடகப் பதிவில் குற்றஞ்சாட்டி உள்ளார்.
“ஒரு ரூபாய் என்றாலும் அது மக்களிடம் முறையாக வந்து சேர வேண்டும் என விரும்புகிறோம். அதற்காகத்தான் நலத் திட்டங் களைத் தீட்டுகிறோம்.
“அவை அனைத்தும் மக்களைச் சென்றடைகின்றனவா என்பதை உறுதி செய்து செம்மைப்படுத்தத்தான் ‘நீங்கள் நலமா?’ என்ற திட்டத்தையும் அறிவித்துள்ளோம்,” என்று முதல்வர் ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

