சென்னை: திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை திமுக தலைமையகம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இம்முறை திமுக கூட்டணியில் முக்கியமான கட்சிகள் பல இடம்பெற்றுள்ளன. அக்கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக கடந்த சில நாள்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
கூட்டணியில் நிறைய கட்சிகள் இடம் பெற்றிருப்பதாலும் அவை அதிக தொகுதிகள் கேட்டதாலும் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது. மதிமுக மூன்று தொகுதிகளைக் கேட்டதாகவும், திமுக தலைமை அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில் இருதரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இம்முறை மதிமுகவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கையெழுத்திட்டனர்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வைகோ, “தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் முதல்வரும் நானும் கையெழுத்து இட்டுள்ளோம்.
ஒதுக்கப்படும் தொகுதி குறித்து கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு சொல்வதாக சொல்லி இருக்கிறார்கள். ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது மன நிறைவு தான். எங்களுக்கு ஒதுக்கிய தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடவுள்ளோம்,” என்றார்.
திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக ஆகிய கட்சிகளுடன் ஏற்கெனவே தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள், மற்ற இரு கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கிடையே திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது குறித்தும் திமுக தலைமையகம் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இம்முறை தங்களுக்கு விழுப்புரம், சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள் பானைச் சின்னத்தில் போட்டியிடுவதாக அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இம்முறை 6 தொகுதிகள் கொண்ட விருப்பப் பட்டியலை திமுகவிடம் அளித்திருந்தது விசிக. அவற்றுள் சிதம்பரம், விழுப்புரம், காஞ்சி, திருவள்ளூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் விசிகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இவ்விரு தொகுதிகளில்தான் விசிக போட்டியிட்டது. இவ்விரு தொகுதிகளுமே தனித்தொகுதிகளாக உள்ளன.