சென்னை: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளும் புதுவையில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தொகுதிப் பங்கீடு முடிவடைந்ததை அடுத்து திமுக அணியில் உள்ள கட்சிகள் வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளன.
இம்முறை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியதுபோக, திமுக 21 இடங்களில் நேரடியாகப் போட்டியிடுகிறது.
திமுக கூட்டணியில் தமிழகத்தில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகளும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
சனிக்கிழமை மாலை செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்றார்.
சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் திமுகவுடன் நட்புறவோடு உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தக் கூட்டணி தொகுதிப் பங்கீட்டின் மூலம், திமுக, காங்கிரஸ் இடையேயான நட்பு மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.
இரு கட்சிகளையும் யாராலும் பிரிக்கவே முடியாது என்றும் இரு கட்சிகளும் ஒன்றாகப் போராடி, ஒன்றாகவே வெற்றி பெறுவது உறுதி என்றும் வேணுகோபால் மேலும் தெரிவித்தார்.
கடந்த மக்களவைத் தேர்தலிலும் திமுக அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கட்சிகள் இம்முறையும் கூட்டணியில் நீடிக்கின்றன. அக்கட்சிகளுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட தொகுதிகளே இம்முறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த தேர்தலில் ஐஜேகே கட்சி நிறுவனர் பாரிவேந்தருக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்தலில் அவர் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளார்.
இம்முறை மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு மக்களவைத் தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. எனினும் மாநிலங்களவையில் ஓரிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிவடைந்த நிலையில், சூட்டோடு சூடாக திமுக கூட்டணிக் கட்சிகள் வேட்பாளர் தேர்வுக்கான நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளன.
திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் ஞாயிற்றுக்கிழமை நேர்காணல் நடைபெற்றது.