மன்னார்குடி: பெங்களூரில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக கர்நாடக அரசு பொய் பிரச்சாரம் செய்து வருகிறது என்று தமிழக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
தண்ணீர்த் தட்டுப்பாட்டை காரணம் காட்டி காவிரிக்கு குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு சூழ்ச்சி செய்வதாக தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதல்வர் அணைகட்டும் முயற்சியை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
“தண்ணீர் இல்லை என்று கூறி கர்நாடக அரசு அனுதாபம் தேட முயற்சி செய்கிறது. இதை நாம் நம்பிவிடக்கூடாது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து மௌனம் காப்பது ஏற்கத்தக்கது அல்ல,” என்றார் பி.ஆர்.பாண்டியன்.
காவிரி டெல்டா பகுதியில் மார்ச் மாதமே தூர்வாரும் பணி தொடங்கப்பட்டு இருப்பதை வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர், தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பே இப்பணியை முழுமையாக முடிப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.